BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Sunday, November 21, 2010

நீ இருந்தும்



நீ இருந்தும் ...
கண்களில் தூசி விழுகின்றன
நிலாக்களற்ற இரவுகளே வருகின்றன
மௌனங்கள் மொழியாகின்றன
வார்த்தைகள் பொருளற்று
வீழ்கின்றன
நீ இருந்தும்...

பதில்களற்ற கேள்விகளாய்
பாதைகளற்ற பயணங்களாய்
உயிருள்ள பிணமாய்
பசியற்று உண்ணுக்கிறேன்
உன் தெருக்களில்
நீ இருந்தும்...

இப்படி தான் விடியுமோ
என் வாசற் சூரியன் இனி
நீ இருந்தும்....
நான்.... நான்.... நான் மட்டுமே
நீ இருந்தும்...

Tuesday, October 26, 2010

அயல்



உறவுகளை அறுத்தெறியும்

ஆயுதம் ஒன்றை

செய்யத் தொடங்குகிறேன்

நள்ளிரவுதோரும்

அது முழுமை பெறும்

ஒரு பகலிலோ ஓர் இரவிலோ

அன்று நான் அயலாகி இருப்பேன்

நிலம் விட்டு நீங்கி; நீரற்று

நீளும் வேர் போல

Tuesday, September 28, 2010

முத்தங்களும் யுத்தங்களும்




வாழ்க்கையின் தூரங்களைத்
தொலைத்துவிட்டு
நானும் வருகிறேன்
உனது பயணங்களில்
தோள் கொடு நான் சாய

தொலைந்த கனவுகளை
கொஞ்சம் மீட்போம் வா
ஒவ்வொரு முத்தங்களோடும்
பிரித்து சேர்த்த
ஒவ்வொரு யுத்தங்களோடும்

மடித்தருவாயா
நான் குழந்தையாகி போக
தனிமை தின்ற தினங்களிளெல்லாம்
இன்னொரு தாயாக

Tuesday, September 7, 2010

வானம் தேடி


வானம் சென்று
உனக்காக சேமித்த
பனித்துளிகள் எல்லாம்
கரிக்க தொடங்கி கொண்டிருக்கின்றன
நான் இரவை
சபித்துக் கொண்டிருக்கிறேன்
நீ நிலவில்
பயணித்துக்கொண்டிருக்கிறாய்
புழுதியில் அமிழ்ந்து
போகின்றன பனித்துளிகள்
ஒவ்வொன்றும்
இந்த பொழுதும்
இழந்தாகி விட்டது
தத்தம் வீடு திரும்புகிறோம்
அவரவர் இயல்போடு
எனக்கான இசையை வழங்கி
கொண்டிருக்கிறது வானொலி
நான் பறவையாகி போகிறேன்
மீண்டும் வானம் தேடி

Wednesday, July 28, 2010

அபாயக் குறிகளோடு அவள் நெருங்குகிறாள்



ஒற்றைக் காடொன்றைத் தேடுகிறேன்
கண்ணாடி ஒளிரும் மரங்களுக்குள்
நகர வீதியில் நச்சுவாயூ
உயிரற்ற ஊர்வனங்களோடு

நான்கு சுவருக்குள் கரியமிலவாயு
நான் சுவாசிக்க மீண்டு திரும்புகிறது
உனது பிராணமாக

உன் நாசி துவாரங்களில்
துளையிட்டு நுழையும்
என் மூச்சு
உனது நுரையீரல்களில்
கலந்து கசிக்கிறது
காண்ணாடி பேழைக்குள்
குளு குளு கருவியோடு
மூச்சும்; பேச்சும் இயந்திரமாகி
மூலைக்கொன்றாய் கிடக்கிறோம்

வயிறு பிழைக்க ;வாழ்வு தழைக்க
மருந்திட்ட தட்டான்களாய்
மாறிப் போயிருக்கும் நம் தேகம்
துர்தேவதைகளின் வாசத்தை
ஆணும் பெண்ணுமாய்
உடலெங்கும்
தெளித்து; நுகர்ந்து பூசிக்கொள்ள
அழுகி கொண்டிருக்கிறது
நிலவு பூமி

பதறி துடிக்கிறாள்
இயற்கை அன்னை
பாவம் தன் கற்பு
களவாடப்பட்டுகொண்டிருக்கிறதென்று
யாருக்கும் கவலையில்லை
யாரும் கேட்பதும் இல்லை
அழுது ஓலமிடும்
அவளது கதறலை

சிதைந்த உடலோடு
சீற்றம் கொண்ட அரக்கியாய்
உருக்கொள்ள தொடங்கியிருக்கிறாள்
ஆயுதம் வீசி
அவ்வப்போது சில
அபாயக் குறிகளோடு

இப்போழுது கேட்க
தொடங்கியிருக்கின்றன
உங்களின் ஓலங்கள்
அவரவர் வீடுகளில்

இன்று அவளது செவிகள்
ஊனமாக்கப்பட்டிருப்பதை
மறந்து

Tuesday, July 20, 2010

காலச் சிலுவைகள்



கடிக்கார முட்கள்
விஷமாகி கொண்டிருக்கின்றன
காத்திருத்தலின் வலிகளோடு;
இதயம் நுழைந்து
விழி சேராது ப்பிரியங்களில்
நிறைந்து நீள்கிறது
நிலாக்கள் அற்ற இரவுகள்

கூடுகள் காணாத பறவையென
நம்மிருப்பு
நாட்களின் நகர்வுகளில்
நரகமாகி கிடக்க
நிகழ்காலங்களை விற்று
எதிர்காலத்திற்குள்
இறந்து கிடக்கிறோம்
வண்ணத்துப்பூச்சிகளாய்

நீ நீயாக நான் நானாக
யாரும் அறியா வண்ணம்
கண்ணீர் துளிகளுக்குள்
இன்னும் எழுதப்படாத
நம் கடிதங்களின்
கடைசி வார்த்தைகளில்
என்றும் அன்புடன்
நான் உனக்காக

Sunday, June 13, 2010

பழகிய நட்பும் பழைய செருப்பும்




அங்கிருந்து அகன்றபடி என் கால்கள்
கழட்டி வைத்த நட்போடு
நீ நடப்பதையும்; கடப்பதையும்
கவனித்தப்படி சிரிக்கிறது
உன் வீட்டு பழைய செருப்பொன்று
இன்று மெல்ல மெருகேறியிருக்கின்றன
உன் பாதங்கள் வேரொன்றுடன்

Tuesday, May 25, 2010

உனதசைவில் என் பரிமாணங்கள்



உயிரெனும் உளியால்

உனை வதைத்து; உடல் வருத்தி

உருக்கொண்டு; உயிர்க்கொண்டு

நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து

உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்

என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்

Tuesday, May 11, 2010

பரிகாசம்


முட்களாய்; கற்களாய்

இதயத்தைத் துளையிடும் அம்புகளாய்

நீங்கள் எறிந்த சொற்களில்

கலங்கி நிற்கிறது

அந்த சிறு ஓடை

தெறித்து விழுகிறது

ஓரிரு துளிகள்

அனலாய் பூமியில்

சமயத்தில் இந்த இயலாமையில்

அங்கேயே; அப்படியே அமிழ்ந்தும்
போகின்றன அவைகள்
இறைவனை சபித்தபடி

Friday, May 7, 2010

தலையணைக் கவிதையும் தங்கிவிடும் காதலும்



தனிமை தாங்கியே
வருகிறது இன்றைய
இரவும்

குருதி வழியும் இதழும்
பசலை பற்றிய விழியிலும்
வந்து நிற்கும் உன் உருவம்
அந்த திசையொன்றின்
மறைவில் நீ வாழ்வதாய்
செய்தியொன்றை கொண்டு வந்து
சேர்க்கிறது அறை இருளோடு
உன்னை துரத்தி
உன்னை விலக்கி
உன்னை மறந்து
இமைகளில் நீ படர்ந்திருப்பதை அறிந்து
நீ இல்லாத இடம்
தேடி பயணிக்கிறது
என் சில இரவு கவிதைகள்

மீண்டும் நாளை
எந்த நிறுத்தத்தில்
உன்னை சந்திப்பேன்; பிரிவேன் என்ற
வழக்கமான சில வினாக்களுடன்.....

Thursday, April 8, 2010

இடைவெளியில் ஒரு தியானம்



நீள்கிறது இடைவெளி

நமக்கான இரவுகள்

நமக்கான கனவுகள்

நமக்காக காத்திருப்பதும்

நாம் அதற்காக விழித்திருப்பதும்

அழகாய் தான் உள்ளது

இந்த பெருவெளி

ஒரு மொட்டின் மௌனத்தைப் போன்று

Tuesday, April 6, 2010

உள்ளங்கைகள்



உன் இருப்பு என்னோடு
உள்ளங்கைகள் போன்றது
அவைகள் தரும் மென்மையில்
கோடுகள் இணையும் மத்தியில்
கடவுள் அங்கு வாழ்வதாய் ஐதீகம்

என்னுள் கடந்து செல்லும்
உன்னை அங்குதான் கண்கிறேன்
இமை கொள்ளாமல்

விழிக்கொண்ட தேடலில்
மௌனம் தோய்ந்த கன்னத்தை
தாங்கி நிற்கும் இதழாய்
என்னோடு பேசும்
இன்னொரு மொழியாய்
இங்கு தான் துயில்கிறாய்

தூரமொன்றும் இல்லை
எல்லையில் நான் சுமக்கும்
உன் என் இதயம்



Saturday, March 27, 2010

நான்கு கண்களின் கனவுகள்



வார்த்தைகளால் தொடுவதும்
மௌனங்களால் முத்தமிடுவதும்
காற்றலைகளால் பகிர்கிறோம்
உயிர் மூச்சை

உன் முகம் பற்றி அலைகிறதென்
என் கண்கள்
ஒவ்வொரு முறையும்
பயணிக்கிறாய் என்னுடன்

எந்த தீவில் பிறந்தாயோ
எந்த வீதியில் இணைவோமோ
மறைந்து தினம் மலர்கிறது நேசம்
பாதசுவடோடு சேர்ந்து விழுகிறது
பின் விலகி நகர்கிறது
உருவமற்ற நிழலாய் நம் பயணம்

நிரம்ப உணர்கிறேன் உன் நேசம்
காற்று மட்டுமே நிரப்பி விடுகிறது
உன் அணைப்பை

நாட்கள் கடக்க; மாதம் கடக்க
கடந்து கொண்டே இருக்க
நான்கு கண்களின் கனவுகளும்
வழி நெடுகிலும் வலியோடு
சுமந்து வருகிறது இந்த பொழுது
உன்னோடும் என்னோடும்

இரவும்; இரவோடு சேர்ந்த பகலையும்
எந்த தேசத்தில்
என்னோடு சேர்ந்து காண்பாய்

என் கழுத்து வரை இந்த கவிதையில் நீ
உன் கனவுகளின் தேடலில் நீ
மௌனிக்கிறது உயிர் அன்பு
வானமற்ற நிலவாய்...