BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Thursday, March 19, 2009

பேசும் சித்திரங்கள்


சுவரில்லாமல் சித்திரங்கள் நான்
வரையத் தொடங்கிய பொழுதொன்றில்

இருள் சூழ
எங்கோ மறைந்து போயின அவை


பின் என் நிழலுக்குப் பின்னால்
நின்று பேருருவம் கொண்டு
சிரிக்கத் தொடங்கியது
தன்னை ஓர் எஜமானி என்று
சொல்லிக் கொண்டது

தன் கர்வம் தீர
என்னை
முழுதும் தின்று விழுங்கியது

மூச்சடைத்து நான்
இறந்த போது

கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று கோசமிட்டு

நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்
..

Tuesday, March 3, 2009

ஓர் அக்னி இரவு

ஓர் அக்னி இரவில்
தோன்றிய கனவு
கதற கதற
நெரிக்கப் பட்டது கழுத்து
விழிகளில் குருதி வழிய
உடலெங்கும் நக கீறல்கள்
பலத்தக் காயத்திற்கு உட்பட்ட
உடல் மீது எறியப்பட்டது
திரவமொன்று

கனவில் பொசுங்கிய நான்
இறுதி சடங்கில் மௌனமாய்
உன் கைகளைப் பற்றி பிரிய

அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்

Monday, January 19, 2009

அந்தி



சில்லென்ற நதியில்
சிணுங்கும் தென்றல்
கலகலவென இலைகள்
சிரிக்க…

திட்டு திட்டாய்
பாதச் சுவடுகள்
பட்டும் படாமல்
ஏந்தி நிற்கும் மணல்வெளி

வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது

பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு

Wednesday, November 19, 2008

தூரப் போ...

ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?

சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....

அவைகளாவது சிரிக்கட்டுமே

Thursday, October 30, 2008

நினைவில் மட்டுமே




• ஆழ்ந்த உறக்கத்தில் அப்பா
துக்கத்தில் ஆழ்ந்து விட்ட வீடு
சிரித்துக் கொண்டே நுழைந்தன
மலர்வளையங்கள்

• அறையில் அழுது
கொண்டிருக்கும் அம்மா
சுவரில் மௌனமாய் சிரித்துக்
கொண்டிருக்கும் அப்பா
தன் நெற்றிப் பொட்டை
அப்பாவின் நிழல் படத்தில்
இடும் அம்மா.

• இன்றும் அப்பாவின் உழைப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கின்றன
வாசலில் கிடக்கும்
அவரின் தேய்ந்த செருப்புகள்

• பள்ளிக்கு வழியனுப்பி வைத்த
அப்பாவை
முட்கள் குத்திய வலியோடு
கல்லறைக்கு வழியனுப்பி
நின்றன கால்கள்

• நிம்மதியை எடுத்துக் கொண்டு
நிம்மதியாய் உறங்கும் அப்பா
கனவில் வந்து போனாலும்
வருவது அப்பா என்பது தான் நிஜம்.

• உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"

Friday, September 19, 2008

நிகழ்ந்தாக வேண்டும்

நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்

நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்

பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே

எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்

உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!

முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள

மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு

Monday, September 8, 2008

பேய் கோபம்

















உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்

நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்

கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்

புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று

நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்

ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா

Tuesday, September 2, 2008

சிதறிய பிம்பங்கள்

 மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று

 அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்

 தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று

 ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?

Tuesday, August 19, 2008

ஏய் மழையே



துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
வெட்கத்தில் சிவக்க

கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க

உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே

நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
என் தேகமெங்கும்
மெய் எழுதிப் போ
வெள்ளை மையில்

Friday, August 15, 2008

கொலை முயற்சி




அன்றே
நான் இறந்ததாய்
சில மலர்
வளையங்களைச்
செலுத்தி இருப்பாய்
இன்னும் பெயரிடாதாய்
அந்தக் கல்லறைகளில்
அங்கே என்னைத்
தேடியும்
தொலைத்திருப்பாய்
தீராத சந்தேகம்
தீர்க்க வரும்
தேடல்களில்

வார்த்தைகளால்
என் உடலெங்கும்
பிரம்ம அஸ்திரங்கள்
தொடுக்கவும்
முயற்சிக்கிறாய்

அவை
என் இறப்பை
உறுதி செய்ததாய்
மீண்டுமொரு நிம்மதி
பெரும் மூச்சுக்
கொள்கிறாய்
இறந்து பிறக்கும்
என் காதலில்!