BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Saturday, March 27, 2010

நான்கு கண்களின் கனவுகள்



வார்த்தைகளால் தொடுவதும்
மௌனங்களால் முத்தமிடுவதும்
காற்றலைகளால் பகிர்கிறோம்
உயிர் மூச்சை

உன் முகம் பற்றி அலைகிறதென்
என் கண்கள்
ஒவ்வொரு முறையும்
பயணிக்கிறாய் என்னுடன்

எந்த தீவில் பிறந்தாயோ
எந்த வீதியில் இணைவோமோ
மறைந்து தினம் மலர்கிறது நேசம்
பாதசுவடோடு சேர்ந்து விழுகிறது
பின் விலகி நகர்கிறது
உருவமற்ற நிழலாய் நம் பயணம்

நிரம்ப உணர்கிறேன் உன் நேசம்
காற்று மட்டுமே நிரப்பி விடுகிறது
உன் அணைப்பை

நாட்கள் கடக்க; மாதம் கடக்க
கடந்து கொண்டே இருக்க
நான்கு கண்களின் கனவுகளும்
வழி நெடுகிலும் வலியோடு
சுமந்து வருகிறது இந்த பொழுது
உன்னோடும் என்னோடும்

இரவும்; இரவோடு சேர்ந்த பகலையும்
எந்த தேசத்தில்
என்னோடு சேர்ந்து காண்பாய்

என் கழுத்து வரை இந்த கவிதையில் நீ
உன் கனவுகளின் தேடலில் நீ
மௌனிக்கிறது உயிர் அன்பு
வானமற்ற நிலவாய்...